ஆம்பூர்: ஆம்பூரில் காணார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சான்றோர் குப்பம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வண்ணான்துறை என்ற பகுதி உள்ளது.
வண்ணான்துறை பகுதியில் இருந்து ஆம்பூர் பாலாற்றை இணைக்கும் லஷ்மி நகர், இந்திரா நகர், சாமியார் மடம் பகுதி வரை கானாறு செல்கிறது. இந்த காணாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் மழை காலங்களில் சான்றோர்குப்பம், லட்சுமி நகர், சாமியார் மடம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்து விடுகிறது .
இதையும் படிக்க: குரூப் – 4 தேர்வு பணியிடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைகிறது. அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை கானாறு மீட்பு குழு, இளைஞர்கள், விவசாயிகள் உள்பட ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.