சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். 15 மற்றும் 16 இல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது , கிழக்கு-மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய-மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது.

நாளை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளும். இதன் காரணமாக அடுத்துவரும் 5 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை நீடிக்கும். அடுத்து 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை அதேபோல், தர்மபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். 15 மற்றும் 16 இல் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அக். 14 ஆம் தேதி தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மேலும், திருப்பூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

அக். 15 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மற்றும் புதுச்சேரியில் கன மழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் , ஈரோடு, அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அக். 16 ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

அக். 17 ஆம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் ஞாயிற்றுக்கிழமை முதல் விட்டு விட்டு மழை துவங்கி திங்கள்கிழமை (அக்.14) முதல் படிப்படியாக அதிகரித்து 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையாக பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை முதல் 15 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16 மற்றும் 17 தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 52 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

வங்க கடல் பொறுத்தவரையில் ஞாயிற்றுக்கிழமை தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தென்மேற்கு பருவமழையானது தற்போது விலகிக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து முற்றிலுமாக விலகி வடகிழக்கு பருவமழை 15,16 தேதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என கூறினார்.

பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, வழக்கமாக வடகிழக்கு பருவமழைக்கான இயல்பு தேதி அக்.20. ஏழு நாள்கள் முன்போ அல்லது பின்போ தொடங்கினால் இயல்பு என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மழை குறித்த தகவல்களை தமிழக அரசுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தகவல் தொடர்பில் இருக்கிறோம். நாள்தோறும் வானிலை தகவல், மீனவர்களுக்கான எச்சரிக்கை, 3 மணி நேரம் எச்சரிக்கை என அனைத்து தகவல்களையும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம் என கூறினார்.

மேலும் மதுரையில் திடீரென்று 16 மிமீ மழை பெய்தது தொடர்பான கேள்விக்கு, மாவட்டங்களுக்கான மழை நிலவரங்களை நாங்கள் குறிக்கிறோம். ஆனால், சரியாக இந்த இடத்தில் என கூறிவிட முடியாது. வானிலை நிகழ்வுகள் பல காரணங்களால் நிகழ்கிறது. ஒவ்வொரு வினாடியும் பல மாற்றங்கள் நிகழும் என கூறினார்.

மேலும் கனமழை, மிக கனமழை, அதி கனமழை என்பதை தான் சொல்ல முடியும். எத்தனை மிமீ மழை பெய்யும் என கணிக்க முடியாது. அந்த அளவிற்கு இன்னும் அறிவியல் வளரவில்லை என பாலச்சந்திரன் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கனமழையும், 29 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 16 மிமீ மழை பதிவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024