அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 15 -ஆம் தேதி வாக்கில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன், காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதையும் படிக்க: மழைக்கு சவால்! வேளச்சேரி பாலத்தில் காரை நிறுத்தத் தொடங்கிய மக்கள்!
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.