சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் சாம்சங் நிர்வாகத் தரப்பு மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் இன்று (அக். 15) நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர்.
தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, சாம்சங் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புவதாக தெரிவித்ததாக, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதிலுரையை தாக்கல் செய்யவும் அரசு வலியுறுத்தியுள்ளது.
சாம்சங் தொழிலாளர் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்தனர்.
இதையும் படிக்க | 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது.
இதற்கு முன்பு கடந்த வாரம் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிஐடியு மாநில செயலாளா் முத்துக்குமாா் அமைச்சா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வாா்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால் வழக்கம்போல் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.