சென்னை: கனமழை வெள்ளத்தின் போது மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை டிரோன்கள் மூலம் வழங்குவதற்கான சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை முன்னோட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை டிரோன்கள் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 டிரோன்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க |சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்!
இந்த டிரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
மேலும், இந்த டிரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த டிரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி, துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, எம்.பிருதிவிராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.