ஜம்மு-காஷ்மீர் நீண்ட காலத்திற்கு யூனியன் பிரதேசமாக இருக்காது, விரைவில் முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கப்படும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்புக்கு முன் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியது, காலியாக இருக்கும் அனைத்து அமைச்சர் பணியிடங்களும் ஒரே நேரத்தில் நிரப்பப்படாது, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தில்லி போன்ற அரை மாநிலத்தை ஆளும் அனுபவத்தைத் தான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் கற்றுக்கொள்ள நிறையப் பாடங்கள் உள்ளன.
கடந்த ஆறு வருடங்களில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். சில தவறுகளைச் செய்தேன். அந்தத் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று எண்ணினேன். ஏனென்றால் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் முட்டாள்களே செய்வார்கள்.
அதேசமயம் யாரும் சரியானவர்கள் அல்ல. எனவே ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு. எனவே நாட்டை ஆட்சி செய்த அனுபவம் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்வர்.
நாங்கள் நீண்ட காலத்திற்கு யூனியன் பிரதேசமாக இருக்கமாட்டோம். அரை மாநிலம் என்பது தற்காலிகமானது, விரைவில் முழு மாநிலமாக மாறுவோம் என்று அவர் கூறினார்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, முந்தைய மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் முதல் முதல்வராக அப்துல்லா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.