பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு சில மாதங்களில், நியாய விலைக் கடைகளில் பருப்பு இருப்பு இல்லை என்றும், பாமாயில் அனைவருக்கும் விநியோகிக்கவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், இதனை அவர் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக உணவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக பரவிய தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தேன்.
அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (அக். 15) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
2,04,08,000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன.
மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும்
வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.