உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கே இட்டுச் சென்றுள்ளது.
காஸியாபாத்தின் சாந்திநகர் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிபுரியும் பெண்மணி ஒருவர், அங்கு சமைக்கப்படும் உணவில் தனது சிறுநீரை கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலப்படமான உணவை தினமும் சாப்பிட்டு வந்துள்ள தொழிலதிபர் குடும்பத்தினருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதை அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும், தொடர்ந்து வயிற்று உபாதைகள் நீடிக்கவே, தாங்கள் வீட்டில் சப்பிடும் உணவில் ஏதேனும் கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தங்கள் வீட்டின் சமையலறையில் கண்காணிப்பு கேமரா ஒன்றை ரகசியமாக பொருத்தி கண்காணித்து வந்துள்ளனர். அப்போதுதான், இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, உணவை சமைக்கும்முன், சமையலறையில் இருக்கும் ஃபிரிட்ஜ் பக்கவாட்டில் சற்று மறைவாக நின்றுகொண்டு, அநாகரிகமான முறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார் அந்த வீட்டில் பணியமர்த்தப்பட்டுள்ள வேலைக்கார பெண்மணி.
அதன்பின், அந்த பாத்திரத்தையே சமைக்கவும் பயன்படுத்தும் அருவறுக்கத்தக்க காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. இதைக் கணடதும், ஒருகணம் உறைந்துபோன அந்த தொழிலதிபர் வீட்டுப் பணியாள் மீது காவல்துறையில் ஆதாரத்துடன் புகாரளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வீட்டு வேலைக்கார பெண்மணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கேமரா காட்சிகளைக் கண்டபின், தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார் அந்த பெண்மணி.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்மணி அந்த வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.