சீனாவில் தனியார் ஹோட்டல் இடிந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதற்காக 15 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சீனாவில் உள்ள சாங்ஷாவின் வாங்செங் பகுதியில் வு சியோங் என்பவர் சட்டபூர்வ அங்கீகாரமில்லாமல் நடத்தி வந்த ஹோட்டல் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரலில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 54 பேர் உயிரிழந்தனர்; மேலும் 9 பேர் காயமடைந்தனர். கட்டடத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சியோங் அறிந்திருந்தும், அதனைக் கடைபிடிக்கவில்லை என்று அவர்மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
5 மாடிக் கட்டடத்துக்கு அனுமதி வாங்கி, 8 மாடிக் கட்டடமாகக் கட்டியுள்ளார், வு சியோங். இந்த நிலையில், கட்டடத்தின் வடிவமைப்பாளர் தகுதியில்லாதவர் என்று விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், கட்டட வடிவமைப்பில் ஈடுபட்ட இருவருக்கு தலா ஆறு ஆண்டுகள் முதல் ஆறரை ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இதையும் படிக்க:சல்மான் கான் கொலை முயற்சி வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்!
கட்டட அனுமதி ஆவணம் வழங்கிய நிறுவனத்துக்கு 1 மில்லியன் யுவான் (140,000 டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதி வழங்கிய ஆறு அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள் மற்றும் 4 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், அவர்கள் அந்தத் துறையில் தொடர்ந்து பணியாற்றவும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
கடமையில் அலட்சியம் மற்றும் லஞ்சம் வாங்கியதற்காக வாங்செங் மாவட்டத்தின் முன்னாள் துணைத் தலைவரான ஜோ ஜெங்மாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
கடமையைப் புறக்கணித்த மேலும் 3 முன்னாள் அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 15 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.