சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதரி தேர்வு செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரி வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அக்.21 வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தோ்வு செய்யப்பட்டனர். மேல்சாந்திகள் பெயர்களின் சீட்டுகளை எடுப்பதற்காக பந்தளம் அரச குடும்பத்தைச் சோ்ந்த ரிஷிகேஷ் வா்மா என்ற சிறுவனும், வைஷ்ணவி என்ற சிறுமியும் கோயிலுக்கு இருமுடி கட்டி வந்தனர். ஐயப்பன் கோயில் கருவறை முன்பு சீட்டுக் குலுக்கல் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தியாகவும், மாளிகைபுரம் தேவி கோயிலின் மேல்சாந்தியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். சபரிமலையில் அடுத்த ஓராண்டுக்கு மேல்சாந்தியாக இவர்கள் பணியாற்றுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய மேல்சாந்திகளிடம் மண்டல பூஜைக்காக கார்த்திகை மாத முதல் தேதி நடைதிறப்புக்குப் பிறகு பொறுப்புகளை ஒப்படைக்கப்படும்.
சித்திரை ஆட்டத் திருநாளுக்காக மீண்டும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 31-ஆம் தேதி இரவு நடை சாத்தப்படவுள்ளது.