கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பின்புலத்தில் உள்ளவராக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாா், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை(அக்.17) அறிவித்தது.
இஸ்ரேலின் நடவடிக்கையைப் பாராட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், சின்வார் உயிரிழந்துவிட்டது மரபணு பரிசோதனை முடிவுகள் மூலம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்லதொரு நாள்.
ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள், அமெரிக்கர்கள், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சின்வார்தான் காரணம்.
அக்.7 நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், பாலியல் வன்புணர்வுக் கொடூரங்கள், கடத்தல்கள் ஆகியவற்றுக்கு பின்புலத்தில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் சின்வார்.
சின்வாரின் உத்தரவின்பேரிலேயே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குல் ஊடுருவி பொதுமக்களை படுகொலை செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பலி!
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாா் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஸாவில் போர் நிறுத்தத்தம் ஏற்படுமென அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், ஹமாஸ் தலைவா் உயிரிழந்தாலும், காஸாவில் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.