இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் சிறப்பான சாதனை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 16) தொடங்கியது. மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
46 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இரண்டாம் நாளான இன்று (அக்டோபர் 17) ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: 46 ரன்களுக்கு ஆல் அவுட்; ரோஹித் சர்மா கூறியது என்ன?
நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
சிறப்பான சாதனை
இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் சிறப்பான சாதனை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுப்பது என்பது மிகவும் சிறப்பான சாதனை. இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் கடினம். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக நாங்கள் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். பந்துவீச்சில் எங்களது கடின உழைப்பை கொடுத்தோம். எங்களது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க: முழங்கால் காயத்தால் பாதியில் வெளியேறிய ரிஷப் பந்த்!
வில்லியம் ஓ’ரூர்கி சிறப்பாக பந்துவீசினார். அவரது உயரம் அவருக்கு மிகப் பெரிய நேர்மறையான விஷயமாக இருக்கிறது. அவரது உயரத்தினால் அவரால் பௌன்சர்களை எளிதாக வீச முடிகிறது. பேட்டிங்கின்போதும் அவரது உயரம் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றார்.