புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயக்கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய கலால் துறை தடை விதித்துள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் உத்தரவு பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி கலால் துறைக்கு கோரிக்கை விடுத்து விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி, பாக்கெட்டில் சாராயம் விற்பனை செய்ய கலால் துறை அனுமதி வழங்கியது.
இதையும் படிக்க: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ
இதனிடையே, கடந்த 2019-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை, சாராயம் விற்க பயன்படுத்தப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பாக்கெட் சாராயத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை, கலால் துறைக்கு கடிதம் அனுப்பியது.
சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின்படி புதுவை, காரைக்காலில் பாக்கெட்டில் சாராயம் விற்கத் தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் சாராயக் கடைகளுக்கு கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவை அனுப்பியுள்ளார்.