பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் அழைப்பின் பேரில் ரஷியாவின் கசானில் நடைபெற உள்ள 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். தனது பயணத்தின்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.
இதையும் படிக்க: வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை!
முக்கியமாக இந்தாண்டு உச்சி மாநாட்டில் உலகளாவிய சமூகத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமான சர்வதேச பிரச்னைகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாடு மூலம் முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியத்தைக் கண்டறிவதற்கும் உச்சி மாநாடு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான 15-வது உச்சி மாநாடு தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.