நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க:நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி விழா..! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:
சூர்யா 44 கேஸ்டர் படமில்லை. காதல் கதையுடன் கூடிய அதிகமான சண்டைக் காட்சிகள் இருக்கும். எனக்கு மிகவும் நீண்ட நாள்களாக காதல் கதையை படமாக்கும் எண்ணம் இருந்தது. அதிலும் சூர்யா சார், பூஜா ஹெக்டேவை வைத்து படம் பண்ணும்போது மிகுந்த ஆவலாக இருந்தது.
படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்தாலும் இந்தப்படம் அடுத்தாண்டு கோடைக்காலத்தில்தான் வரும். ஆனால், ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. போஸ்ட் புரடக்ஷன், இசைக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். வேலையை ரசித்து செய்கிறோம். ரிலீஸ் தேதி அழுத்தம் இல்லை என்றார்.