ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதையும் படிக்க |விடியோ அழைப்பு மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட்! புது ஸ்டைலில் ஆன்லைன் பண மோசடி!
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை இன்று(சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார்.
ராஞ்சியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், 'காங்கிரஸ்- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள 11 தொகுதிகளில் இதர கூட்டணி கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும்' என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.