வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து விதிகளின்படி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ராகுல், ரேபரேலியைத் தக்கவைத்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அக்டோபர் 22ல் கோழிக்கோடு வரும் பிரியங்கா, மறுநாள் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பேரணியில் கலந்துகொள்கிறார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கான வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் அறிவிக்கவில்லை.
கடந்த முறை ராகுலை எதிர்த்து எல்டிஎப் வேட்பாளராக சிபிஐயின் அன்னி ராஜா போட்டியிட்டார், அதேநேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் என்டிஏ வேட்பாளராக இருந்தார். நாடாளுமன்ற அரசியலில் பிரியங்கா காந்தியின் அறிவிப்பின் மூலம் வயநாடு மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது. 2019இல், வயநாடு தொகுதியில் 431,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.