இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை (அக். 16) நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இந்த நிலையில், இஸ்ரேலிய நகரமான செசரியாவில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி சனிக்கிழமை (அக். 19) ட்ரோன் தாக்குதல் ஏவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதலின்போது, பிரதமரின் வீட்டில் யாரும் இல்லை என்றும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “ஆளில்லா விமானம் மூலம் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டில் தாக்குதல் நடந்தபோது, பிரதமரோ அவரது குடும்பத்தினரோ யாரும் அங்கில்லை. இந்த தாக்குதலில் யாருக்கும் காயமோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை’’ என்று கூறினார்.
இதையும் படிக்க: இந்திய தூதரகங்களை மூட வேண்டும்! கனடாவில் சீக்கியர்கள் பேரணி
அதற்கு முன்னதாக, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலில் உள்ள கட்டடத்தைத் தாக்கியது என்றும், தாக்குதல் நடத்தவிருந்த வேறு 2 ட்ரோன்களை இஸ்ரேலிய ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
அக். 7 ஆம் தேதிக்குப் பிறகான தாக்குதலில் இருந்து, இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் இருந்து, லெபனான் போரில் குறைந்தது 1,418 பேர் வரையில் இறந்துள்ளனர்; ஆனால், உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.