ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரதமர் ஆட்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் இதனைக் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க பெண்களின் ஆசிகள் என்னைத் தொடர்ந்து உழைக்கத் தூண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
ஒடிஸாவில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே வார இறுதிநாளான நேற்று (அக். 19) ஒடிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
அப்போது அங்குவந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பாஜக மாநில துணைத் தலைவர் பைஜெயந்த் ஜே பாண்டாவிடம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, அவரிடம் ரூ. 100 வழங்குமாறு தனது பணத்தைக் கொடுத்துள்ளார்.
இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பைஜெயந்த் ஜே பாண்டா பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
''ஒடிஸாவின் சுந்தர்கார் மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. அப்போது அங்குவந்த பழங்குடியினப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமர் மோடியிடம் வழங்கி, அவருக்குத் தான் நன்றி தெரிவித்ததாகக் கூறுமாறு வலியுறுத்தினார்.
நான் ரூபாய் வேண்டாம் என அவரிடம் விளக்கிக்கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் மனம் திரும்பும்பி பணம் பெற்றுக்கொள்ளும்வரை என்னுடைய விளக்கத்தையும் அவர் கேட்கவில்லை.
இது ஒடிஸா மற்றும் பாரதம் அனுபவிக்கும் மாற்றத்தின் பிரதிபலிப்பாகும். ஜெய் ஜெகநாத்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,
''இந்த அன்பால் நான் உள்ளம் நெகிழ்ந்தேன். என்னை எப்போதும் ஆசிர்வதிக்கும் நமது பெண் சக்திகள் முன்பு தலை வணங்குகிறேன். அவர்களுடைய ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு அளிக்கிறது'' என மோடி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!
பாஜக ஆட்சி
ஒடிஸாவில் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சியை வீழ்த்தி, 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இங்கு 74 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.