வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடியுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இன்று இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!
அப்போது பேசிய, படத்தின் இயக்குநர் ஞானவேல், “ நடிகர் ரஜினிகாந்த் இல்லையென்றால், வேட்டையன் சாத்தியமில்லை. ஜெயிலர் படத்தின் பெரிய கமர்சியல் வெற்றிக்குப் பின்பும் கதையைச் சார்ந்த ஒரு திரைப்படத்தில் அவர் நடித்தார். படைப்பு சுதந்திரத்துடன் இப்படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இது உருவாகியிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
நிகழ்வு முடிந்ததும் படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.