தூத்துக்குடி மீனவர்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் கேரள விசைப்படகு மீனவர்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 265 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள் தினமும் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி விடுவர். இவர்கள், தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் இரவில் தங்கி தொழில் செய்து வருகின்றனராம்.
தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!
இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் சரிவர கிடைக்காமல், நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இதனைக் கண்டித்தும் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து தொழில் செய்யும் கேரள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்க தமிழக அரசு மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவுள்ளனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.