சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய மாணவர் நாவரசு கொலை வழக்கில், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஜான் டேவிட் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம். இது குறித்து பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனு மீது பரிசீலனை நடைபெறும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜான் டேவிட் சார்பில் முன்கூட்டி விடுதலை கோரிய மனுவை பரிசீலித்த தமிழக ஆளுநர் அலுவலகம், நாவரசுவை கொடூரமாகக் கொலை செய்திருந்ததால், விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டிருந்தது.
இதையடுத்து, அமைச்சரவை முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பதால், மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரை செய்திருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்த மாணவர் நாவரசு 1996-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே. பொன்னுசாமியின் மகனான அவரைக் கொலை செய்ததாக மற்றொரு மருத்துவ மாணவரான ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.
ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மேல்முறையீடு செய்தபோது சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனினும், கடலூர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்டு, தற்போது, மத்திய சிறையில் ஜான் டேவிட் அடைக்கப்பட்டுள்ளார்.