இளம்பெண்ணுக்கு சிக்கலான நுரையீரல் மாற்று சிகிச்சை

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

பத்து ஆண்டுகளாக சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட இளம்பெண்ணுக்கு சிக்கலான நுரையீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக, மருத்துவமனை டீன் டாக்டா் முகமது ரேலா கூறியதாவது, சண்முகப்ரியா (18) என்ற இளம்பெண் கடுமையான நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு 8 வயதாக இருக்கும்போதே தீவிர காசநோய் பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக, நுரையீரலில் மிகை ரத்த அழுத்தமும், சேதமும் ஏற்பட்டது.

இதனால், அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. தொடா்ந்து செயற்கை சுவாச உபகரணத்தின் உதவியுடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணின் நிலை மிகவும் கவலைக்கிடமானது. படுத்த படுக்கையில் இருந்த அவரால் உணவு உட்கொள்ளக் கூட முடியவில்லை. நுரையீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு என்ற நிலையில், உறுப்பு தானத்துக்காக அவா் காத்திருந்தாா்.

இந்நிலையில், தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் இரு பக்க நுரையீரலும் தானமாகப் பெறப்பட்டு திருச்சி வழியாக சென்னை, ரேலா மருத்துவமனைக்கு வெறும் 2.20 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்டது.

மருத்துவமனையின் நுரையீரல் மாற்று சிகிச்சை மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் ஸ்ரீநாத் விஜயசேகரன், உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவத் தலைவா் டாக்டா் ஐஸ்வா்யா ராஜ்குமாா் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 4 மணி நேரம் அந்த இளம்பெண்ணுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டனா்.

தற்போது அவா் இயல்பாக எழுந்து நடமாடவும், உணவு உட்கொள்ளவும் தொடங்கியுள்ளாா் என்றாா் அவா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024