பாகிஸ்தான் ஆதரவு முழக்கம்! விநோத தண்டனை அளித்த நீதிமன்றம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியவரை ஜாமீனில் வெளிவிட்ட மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், நிபந்தனையாக விநோத தண்டனையை அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஃபைசல் கான் என்பவர் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியதை தொடர்ந்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஜாமீன் கோரி ஃபைசல் தரப்பில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும், தவறை ஒப்புக் கொண்ட ஃபைசல் தரப்பு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க : வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

விநோத நிபந்தனை

நிபந்தனைகளுடன் ஃபைசலுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி பாலிவால் உத்தரவிட்டார். மேலும், வழக்கு முடியும் வரை மாதத்தில் முதல் மற்றும் நான்காம் செவ்வாய்க்கிழமைகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி தேசிய கொடிக்கு 21 முறை மரியாதை செலுத்தி, ‘ஜெய் மாதா கி ஜே’ என்று முழக்கமிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாதத்தின் நான்காம் வாரத்தின் செவ்வாய்க்கிழமையான இன்று மிஷ்ரோத் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான ஃபைசல், 21 முறை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி முழக்கமிட்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய ஃபைசல் தெரிவித்ததாவது:

“நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். தேசிய கொடியை மதிக்கிறேன். மேலும், ​​தேச விரோத முழக்கங்களை எழுப்பவோ, தேசிய கொடியை அவமதிக்கவோ வேண்டாம் என்று எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இனி, என் வாழ்நாளில் இந்த தவறை செய்ய மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கபடுகிறதா என்பதை போபால் காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய கொடிக்கு ஃபைசல் மரியாதை செலுத்திய காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024