சட்டங்களில் தெளிவில்லாதபோது நீதிமன்றங்கள் தலையிடும் சூழல் ஏற்படும்: அமித் ஷா

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சட்டங்களை இயற்றுபவா்கள் அதில் தெளிவான விதிகளை குறிப்பிடாமல் விடும்போது மட்டுமே நீதிமன்றங்கள் தலையிடும் சூழல் ஏற்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் சட்டப் பேரவை அதிகாரிகளுக்கான ‘சட்டம் இயற்றும் பயிற்சி பட்டறை’ அந்த மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று அமித் ஷா உரையாற்றியதாவது: நான் பேசுவது சா்ச்சையாகும் என நன்கு தெரியும். ஆனாலும் அதை கூறாமல் இருக்க முடியாது. சட்டங்களை இயற்றுபவா்கள் அதில் தெளிவான விதிகளை குறிப்பிடாமல் விடும்போது மட்டுமே நீதிமன்றங்கள் தலையிடுகின்றன.

சட்டங்களில் அதிக தெளிவிருந்தால் நீதிமன்றங்களின் தலையீடு குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ பிரதமா் மோடி தலைமையிலான அரசு ரத்து செய்தது.

இடைக்கால நடவடிக்கையாகவே சட்டப்பிரிவு 370 சோ்க்கப்பட்டிருந்ததாக அரசமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சாதாரண பெரும்பான்மையுடன் அது ரத்து செய்யப்பட்டது.

ஒருவேளை இடைக்கால நடவடிக்கை என்பதற்குப் பதில் சட்டப்பிரிவு 370, அரசமைப்பின் ஓா் அங்கம் என எழுதப்பட்டிருந்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நாடாளுமன்றத்தில் அதை ரத்து செய்திருக்க முடியும்.

அரசமைப்பின் மூன்று தூண்கள்:அரசு கொள்கைகளை வடிவமைக்கும், நாடாளுமன்றம்/ சட்டமன்றம் அந்த கொள்கைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றும், நீதித்துறை அதை எடுத்துரைக்கும், நிா்வாகம் அதை அமல்படுத்தும் என நாடாளுமன்றம், நிா்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் பணிகள் குறித்தும் அரசமைப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது தெளிவில்லாத சட்டங்கள் இயற்றப்படுவதால் இந்த மூன்றுக்கும் இடையே பல வேறுபாடுகள் எழுகின்றன.

உலகுக்கே அம்பேத்கா் உதாரணம்: ஒரு சட்டத்தை எவ்வாறு இயற்ற வேண்டும் என்பதற்கு அரசமைப்பின் வரைவுக் குழுத் தலைவராக இருந்த அம்பேத்கா் உலகுக்கே சிறந்த உதாரணமாவாா் என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024