மேட்டூர் அணையின் நீர்மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை 27-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்ததாலும் 60 நாள்களுக்கு பிறகு செப்டம்பர் 25-ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது.
தற்போது காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயரந்து வந்தது 29 நாள்களுக்கு பிறகு இன்று (அக்டோபர் 23) காலை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 98.56 அடியிலிருந்து 100.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,586 கன அடியிலிருந்து 29,850 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர்இருப்பு 64.85 டி.எம்.சியாக உள்ளது.