வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிக்க:ரூ. 59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! வெள்ளியும் புதிய உச்சம்!
வயநாட்டில் முதல்முறையாக களம் காணும் பிரியங்கா
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறார். வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியில் உரை நிகழ்த்தினார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், பிரியங்கா காந்தியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: சிவகங்கையில் அக். 31 வரை 144 தடை அமல்!
பேரணியில் பிரியங்கா காந்தி பேசியதாவது,
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாகப் பிரசாரம் செய்து வருகிறேன். 17 வயதில் எனது தந்தைக்கு வாக்கு சேகரித்துள்ளேன்.
பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பரப்புரை செய்துள்ளேன் முதன்முறையாக இப்போது எனக்காகப் பரப்புரை செய்கிறேன்.
மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். இந்த பேரணியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வயநாட்டு மக்களான உங்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.