தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா
இந்நிலையில், நமது கட்சியின் சார்பில், தலைவர் அவர்களின் ஒப்புதலோடு, மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்குரைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.