புது தில்லி: பற்கள் இல்லாத சுற்றுச்சூழல் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.
பயிர்க் கழிவுகளை எரிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்க வகை செய்யும் காற்று தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை ஆணையத்தின் சட்டம் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான சட்டங்கள் இயற்றி அது கடுமையாக பின்பற்றப்படும்வரை, காற்று தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை ஆணைய சட்டம் நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்ட மாட்டார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் நடவடிக்கைகளில் அடுத்த 10 நாள்களில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இதையும் படிக்க.. தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?
நாட்டில் வாழும் அனைத்து மக்களும், சுத்தமான மற்றும் மாசற்ற பூமியில் வாழ்வதற்கு உரிமைபெற்றிருக்கிறார்கள். அதனை உறுதி செய்ய வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்புதான் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே, தில்லியில் 25-30 சதவீத காற்று மாசுவுக்கு காரணமாக இருந்து வருகிறது. இதனால், பயிர்க்கழிவுகளை எரிப்பதை நிறுத்துவதற்கு பல்வேறு யோசனைகள் கூறப்பட்டு, அதனைத் தடுக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டு, அபராதங்கள் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பயிர்க் கழிவுகளை எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதாக காற்று தர மேலாண்மை ஆணையம் இன்று உச்ச நீதிமன்றத்தில் கூறியதையடுத்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.