Saturday, September 21, 2024

எங்கள் அணியினர் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது – நேபாள கேப்டன் ரோகித் பாடெல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

எங்கள் அணியினர் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்த விதம் பெருமை அளிக்கிறது என நேபாள கேப்டன் ரோகித் பாடெல் கூறியுள்ளார்.

செயின்ட் வின்சென்ட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயின்ட் வின்சென்ட்டில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நேபாளம் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 43 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் நேபாள அணியின் கேப்டன் ரோகித் பாடெல் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

எங்கள் அணியினர் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்த விதம் பெருமை அளிக்கிறது. ஆடுகளத்தின் தன்மை மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் பந்து வீசும் போது சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்று கருதியதால் அதிகம் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம். நாங்கள் வெற்றிக்கு மிகவும் நெருக்கமாக வந்தோம்.

ஆனால் கடைசி நேரத்தில் தவற விட்டு விட்டோம். நெருக்கடியான தருணங்களில் நாங்கள் நன்றாக செயல்பட்டோம். ஒட்டுமொத்தத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். முன்னணி அணிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து விளையாடினால் அடுத்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024