உத்தரகண்ட்டில் மசூதியை இடிக்கக் கோரிய போராட்டத்தில் தடுப்புகளை அகற்ற மறுத்த போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
உத்தரகண்ட்டில் உள்ள உத்தரகாசியில் மசூதியின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த தகவல்களைக் கோரிய வலதுசாரி குழுக்கள், வியாழக்கிழமையில் (அக். 24) போராட்டம் நடத்தினர். சன்யுக்தா சனாதன் தர்ம ரக்ஷக் சங்கம், பிற்பகல் 2.30 மணியளவில் நடத்திய இந்த போராட்டத்தில், அந்த மசூதியை இடிக்குமாறு முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்துக்கு கோரப்பட்ட பகுதியைவிட்டு, வேறு இடத்துக்கு செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்டனர். ஆனால், தடுப்புகளை அகற்ற காவல்துறையினர் மறுத்த நிலையில், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க:தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!
மசூதியின் சட்டபூர்வத்தன்மை குறித்த தகவல்களைக் கோரி, தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த மசூதி நிர்வாகம், தேவையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்று கூறியது. இதனைத் தொடர்ந்து, மசூதியை இடிக்கக் கோரி உத்தரகாசி மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பல வலதுசாரி குழுக்கள் மசூதியை இடிக்கக் கோரி, செப். 6 ஆம் தேதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.