தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25) கோவை, திருப்பூா் உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்.25) முதல் அக்.30-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதில், அக்.25-இல் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூா், அரியலூா், நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.25, 26 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தலா 120 மி.மீ மழை பதிவானது. கோவில்பட்டி (தூத்துக்குடி) – 110, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), ஆம்பூா் (திருப்பத்தூா்) – தலா 100, பவானிசாகா் (ஈரோடு) – 90.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அக்.25-ஆம் தேதி வங்கக் கடலில் மணிக்கு 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.