Saturday, October 26, 2024

மதுரையில் கனமழை: சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில 6 நாட்களாக காலை, மாலை என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செ.மீ மழை பெய்தது. மதியம் 3 மணிக்குப்பிறகு 8 செ.மீ மழை கொட்டியது. சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் உடமைகளை எடுத்துக்கொண்டு குடியிருப்புவாசிகள் வெளியேறி உள்ளனர். ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. ராஜகம்பீரம், கொடிக்குளம் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் அதி கனமழை பதிவானது. 1955க்குபிறகு அக்டோபரில் ஒரே நாளில் 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் கனமழையால் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே வெள்ளத்திற்கு காரணம். அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து மதுரையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024