இந்தியப் பங்குச் சந்தைகளில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை, தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவுடன் வணிகம் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வணிகத்தில், சென்செக்ஸ் 660 புள்ளிகள் வரை சரிந்து 80,000 புள்ளிகளுக்கும்கீழ் சென்றது. இறுதியாக 662.87 புள்ளிகள் சரிவுடன் அல்லது 0.83 சதவீத சரிவுடன் 79,402.29 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இன்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், அதிகபட்சமாக 927.18 புள்ளிகள் அல்லது 1.15 சதவீதம் சரிந்து 79,137.98 ஆக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, பங்குச்சந்தை, ரூ. 6 லட்சம் கோடி நட்டத்துடன் நிறைவடைந்தது.
தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 218.60 புள்ளிகள் அல்லது 0.90 சதவீதம் சரிந்து 24,180.80 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இண்டஸ்இண்ட் வங்கி (-18.99%), மகிந்திரா அன்ட் மகிந்திரா, லார்சன், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
அமெரிக்க தேர்தல், சர்வதேச காரணிகள் போன்றவை இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து சரிவுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.