பிரியங்கா காந்தியின் வெற்றிக்காக பணியாற்றிட தேர்தல் பணிக்குழு நியமனம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியின் வெற்றிக்காக பணியாற்றிட செல்வப்பெருந்தகை தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நமது இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் பிரியங்கா காந்தி 23.10.2024 அன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தலைவர் ராகுல்காந்தி மீது பற்றும், பாசமும் கொண்டு முழு நம்பிக்கையோடு கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை வயநாடு வாக்காளப் பெருமக்கள் பெற்றுத் தந்தனர். அதேபோல், இந்த இடைத்தேர்தலிலும் பிரியங்கா காந்தியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடைய தலையாய கடமையாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரியங்கா காந்தியின் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம். வருகிற நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நவம்பர் 11-ம் தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள். எனது தேர்தல் பரப்புரை நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் துவங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெறவுள்ள வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பமுள்ள தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024