இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பாக். அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
இதில் சஜித் கான், நோமன் அலி இருவரும் இணைந்து இந்தப் போட்டியில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள்.
இங்கிலாந்து அணி சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோசமாக விளையாடுவார்கள் எனத்தெரியும். ஆனால், இவ்வளவு மோசமாக விளையாடுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 2 போட்டிகளில் சஜித் கான், நோமன் அலி இருவரும் சேர்ந்து 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.
2ஆவது டெஸ்ட்- முல்தானில் 20 விக்கெட்டுகளும் 3ஆவது டெஸ்ட்- ராவல்பிண்டியில் 19 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
சஜித் கான் (31)
பெஷாவரில் 1993இல் பிறந்த சஜித் கான் வலது கை ஆஃப் பிரேக் பந்துவீச்சாளர். 2021இல் பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சிறிய வயதிலேயே தந்தையை இழந்த இவரை அவரது தாயார் மட்டுமே உழைத்து வளர்த்துள்ளார். துபைக்கு சென்று 6 மாதங்கள் பயிற்சி எடுத்து பெஷாவர் அணியில் இடம்பிடித்துள்ளார். கவுன்டி கிரிக்கெட்டிலும் 2022 தொடரில் இடம்பிடித்துள்ளார்.
சஜித் கான் முல்தான் டெஸ்ட்டில் (7+2) 9 விக்கெட்டுகளும் ராவல்பிண்டி டெஸ்ட்டில் (6+4) 10 விக்கெட்டுகளும் எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
10 போட்டிகளில் 44 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். 5 விக்கெட்டுகள் 3 முறையும் 10 விக்கெட்டுகள் 2 முறையும் எடுத்துள்ளார்.
நோமன் அலி (38)
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 1986ஆம் ஆண்டு பிறந்தவர் நோமன் அலி. 38 வயதாகும் இவர் தனது 34ஆவது வயதில் 2021இல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார்.
மிகவும் வயதானபின் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தவர்கள் பட்டியலில் நோமன் அலி 4ஆவது இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முல்தான் டெஸ்ட்டில் (3+8) 11 விக்கெட்டுகள், ராவல்பிண்டி டெஸ்ட்டில் (3+6) 9 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருது பெறாவிட்டாலும் இவரது இந்தப் போட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.
இருவரும் சேர்ந்து இந்தியாவின் ஷிகர் தவான் போல தொடையை தட்டி போஸ் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.