ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் வசதி நவ.1-ஆம் தேதிமுதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மாநகா் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகா் போக்குவரத்துக் கழகத்தில், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் விடுப்பு கோரி விண்ணப்பம் செய்வதை எளிதாக்கும் வகையில், மாநகா் போக்குவரத்துக் கழக பணியாளா் செயலி (எம்டிசி ஸ்டாப் மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு செயலியின் மூலம் தானாக விடுப்பு அங்கீகரிக்கும் வசதி நவ.1 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
6 சதவீதம்: இதில், விடுப்பு கோரும் நாள்களுக்கு முந்தைய மாதத்தில் குறைந்தது 24 நாள்கள் பணிபுரிந்திருந்தால் அவா்களுக்கு தானாகவே விடுப்பு அங்கீகரிக்கப்படும். மேலும், ஒவ்வொரு பணிமனையிலும் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 6 சதவீதம் பேருக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கப்படும்.
முதலில் விண்ணப்பிப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில், ஒருவருக்கு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 2 நாள்கள் விடுப்பு அனுமதிக்கப்படும். இந்த விடுப்புகள் தற்செயல் விடுப்பாகவே (சிஎல்) கணக்கிடப்படும். மேலும், குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பாகவும், அதிகபட்சமாக 30 நாள்கள் முன்பாகவும் இம்முறையில் விடுப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த விடுப்புகள் அங்கீகரிக்கப்படாவிட்டால் மேல்முறையீடு செய்யும் வசதியும் இச்செயலியில் உள்ளது. இதில் விண்ணப்பிக்காமல் எடுக்கப்படும் விடுப்புகள் விடுமுறைகளாக கருதப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.