தெலங்கானாவின் உப்பல் பகுதியைச் சேர்ந்த பெண், தனது கணவரின் ரூ.8 கோடி சொத்துக்காக அவரைக் கொன்று, சுமார் 800 கிலோ மீட்டர் பயணித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உடலை வீசிய கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவத்தில், கொலையான தொழிலதிபரின் மனைவி நிஹாரிகா, அவரது ஆண் நண்பர் நிகில் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை குறித்து காவல்துறையினர் கூறுகையில், தெலங்கானாவில், தனது பெயரில் இருக்கும் சொத்துகளை மனைவி பெயரில் மாற்றித் தர ஒப்புக்கொள்ளாததால் தொழிலதிபரான ரமேஷ் (55) அக். 1ஆம் தேதி அவரது மனைவியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை காரில் எடுத்துக்கொண்டு 800 கிலோ மீட்டர் பயணித்து, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ரமேஷின் உடலைப் போட்டு எரித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் குற்றவாளிகள்.
இதையும் படிக்க.. விமான வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில் குடும்பச் சண்டைகளும் காரணமா?
குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
மூன்று வாரங்களுக்கு முன்பு, எரிந்த நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றிய காவல்துறையினருக்கு, கொலை செய்யப்பட்டவரது உடல் எரிந்துவிட்டதால் அடையாளம் காண்பதே சவாலாக இருந்தது.
அதன்பிறகு, அப்பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியதில், ஒரு சிவப்பு நிற கார். காவல்துறையின் கண்ணில் பட்டது. அந்தக் காரின் எண்ணைக் கொண்டு, அது தெலங்கானாவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அப்போதுதான், ரமேஷ் காணாமல் போனதாக தெலங்கானாவில், அவரது மனைவி புகார் கொடுத்திருந்ததும் அவர்களுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து, கர்நாடக காவல்துறையினர், தெலங்கானா காவல்துறையினருடன் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
முதலில், காணாமல் போன ரமேஷ்தான் கொலை செய்யப்பட்டவர் என்று தெரிய வந்ததும். அவரது மனைவி மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், பொறியியல் படித்த நிகாரிகா, சிறு வயதில் திருமணமாகி, பின்பு விவாகரத்தானவர் என்பதும், பண மோசடியில் சிறை சென்று அங்கு சிலருடன் பழகிய நிலையில், வெளியே வந்து ரமேஷை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, அவரது சொத்துகளை மோசடி செய்ய திட்டமிட்டு, பிறகு அது கொலையில் முடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.