மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக – காங்கிரஸ் போட்டி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைத்தது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக யார் நியமிக்கப்படுவார்? என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. பொதுவாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து சுமூகமாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பாஜக – காங்கிரஸ் இடையே சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தரவேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பாஜக கோரிக்கை விடுத்தது. ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தருவோம் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பாஜக சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கொடிக்குனில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட சுரேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் 11.50 மணியளவில் சுரேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சபாநாயகர் பதவிக்கு பாஜக – காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேர்தல் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024