சென்னை, புறநகரில் பரவலாக மழை!சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.கோப்புப் படம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காலைமுதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
சென்னை எழும்பூர், சென்ட்ரல், அமைந்தகரை, புரசைவாக்கம், நந்தனம், கோயம்பேடு, கே.கே. நகர், கிண்டி, செங்குன்றம், முகப்பேர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூவிருந்தவல்லி, வண்டலூர், திருமழிசை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 25) அறிவித்திருந்தது.
நீலகிரி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.