அவையில் மயங்கிய காங்கிரஸ் எம்.பி.! நேரில் சந்தித்த கார்கே!நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்., எம்.பி. மயங்கினார்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை விவாதிக்க அனுமதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பூலோ தேவி நேதம் மயங்கி இன்று (ஜூன் 28) விழுந்தார்.
சக உறுப்பினர்கள் உதவியுடன் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.
நாடாளுமன்றம் இன்று கூடியதும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் அவை இருக்கையிலிருந்து எழுந்து அமளியில் ஈடுபட்டனர்.
இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவை மீண்டும் கூடிய நிலையில், நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்கக்கோரி, உறுப்பினர்கள் அனைவரும் அவை நடுவே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தள உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவையில் உறுப்பினர்கள் அனைவரும் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தபோது, போராட்டத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் எம்.பி. பூலோ தேவி நேதம் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார்.
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இதனைக் கவனித்து, உறுப்பினர்கள் உதவுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது பூலோ தேவி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தினார்.