Friday, September 20, 2024

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக திகழும் தமிழ்நாடு – அரசு பெருமிதம்

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்லபல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிடும் நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இத்துறையின் பெயருக்கேற்ப, மிகவும் குறைந்த வயதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் அர்ப்பணிப்பு உணர்வுகள், தொய்வில்லாத் தொடர் பணிகள் காரணமாக, விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப் பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள்:-

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட வேண்டுமென்கின்ற தொலை நோக்குடன் திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவையில் வெளியிட்டார்.

பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம்:-

கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.87.61 கோடி:-

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுவரையில் எந்த அரசும் வழங்கிடாத வகையில் உயரிய ஊக்கத் தொகையாக 87 கோடியே 61 இலட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

44-வது செஸ் ஒலிம்பியாட்:-

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய திட்டமிடல் காரணமாகவும், இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வரலாற்று புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் விளையாட்டு நாடுகள் எல்லாம் வியக்கும் வண்ணம் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழ்நாட்டரசின் விருந்தோம்பலைக் கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது.

இதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்க் கொடி நாட்டியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு " மேன் ஆப் தி ஈயர்" (Man of the Year) என்கின்ற விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

2023 சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சதுரங்க அறக்கட்டளையும் இணைந்து தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய 2 கோடி ரூபாய்ச் செலவில் 8 நாடுகள் பங்கேற்ற சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் – 2023 போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 5,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மிகவும் சிறப்புடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் 30 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.

முதலமைச்சர் கோப்பை-2023

15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை-2023, 52 கோடி ரூபாய்ச் செலவில் கடந்த 2023ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 3 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சென்னையில் 17 இடங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 27 ஆயிரத்து 554 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக சர்வதேச அலை சறுக்குப் போட்டி, அண்ணா மாராத்தான் போட்டி, ஹெசிஎல் சைக்கோளத்தான், அண்ணா மிதிவண்டிப் போட்டி உள்ளிட்ட போட்டிகளும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு:-

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 13 வீரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில இளைஞர் விழா :

சென்னையில் நாட்டுநலப்பணித் திட்ட மாநில இளைஞர் விழா 2023-ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாட்டில் முதன் முறையாக சென்னை கலைவாணர் அரங்கம் மற்றும் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்:-

2022-2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 14 மாவட்டங்களில் 1,076 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடி பனை விதைகள் நடப்பட்டன. இதில் 1,00,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக தமிழ்நாடு நாட்டுநலப்பணித்திட்டம் குளோபல் உலக சாதனை விருதினைப் பெற்றுள்ளது.

குடியரசு தின முகாம்:-

2023-ம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தைப் பெற்றது. மேலும் இந்நிகழ்வில் 6 பிரிவுகளில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குநரகம் "சிறந்த என்.சி.சி இயக்குநரகம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

2024-ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024