கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது ஜூன் 5ம் தேதி உத்தரவு – டெல்லி கோர்ட்டு

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து, கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் ஜூன் 2-ந் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறியது. அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இடைக்கால ஜாமீன் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஜாமீனை நீட்டிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"நான் 7 கிலோ உடல் எடை குறைந்து விட்டேன். எனது சர்க்கரை அளவு தொடர்பான 'கீடோன்' அளவு அதிகரித்து விட்டது. அது, கடுமையான நோய்வாய்ப்படுதலுக்கு அறிகுறி ஆகும். எனவே, பெட்-சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, எனக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், செய்தியாளர் சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து தவறான கருத்துகளை கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது ஜாமீன் நிபந்தனைகளுக்கு எதிரானது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, நீங்கள் மீண்டும் சரண் அடையப் போகிறீர்களா? என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, எனக்கு எந்த நிவாரணமும் கோர்ட்டு வழங்கவில்லை எனில், வேறு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால், சரணடைவேன்" என்று கெஜ்ரிவால் கூறினார். இதையடுத்து, கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் தற்போது நீட்டிக்கப்படாததால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, கெஜ்ரிவால் நாளை மீண்டும் சிறையில் சரணடைய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

LIVE : கெஜ்ரிவால் மனு – ஜூன் 5ல் உத்தரவு https://t.co/RopS8Qr0Gc

— Thanthi TV (@ThanthiTV) June 1, 2024

You may also like

© RajTamil Network – 2024