தாய் வீட்டுக்கு சென்ற மனைவியிடம் செல்போனில் தகவல் சொல்லிவிட்டு மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வியாசர்பாடி,
சென்னை வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). இவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின் ஜஸ்டினா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான அண்ணாதுரை, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த ஜாஸ்மின் ஜஸ்டினா, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் தனியாக வசித்து வந்த அண்ணாதுரை, தனது மனைவிக்கு போன் செய்து மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அண்ணாதுரை மீண்டும் தனது மனைவிக்கு போன் செய்து, "நான், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக" கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் ஜஸ்டினா, உடனடியாக தனது வீட்டுக்கு சென்றார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அண்ணாதுரை போர்வையால் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.