தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா கடற்கரைக்கும் இடைப்பட்ட வங்கக் கடலில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது செப்.6, 7 ஆகிய தேதிகளில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், ஆந்திரம், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (செப். 6) முதல் செப். 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் செப்.6, 7 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மிதமான மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரினால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்தனா்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அசோக் நகர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அடையாறு, தாம்பரம், பட்டினம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.