அணி தோல்வி அடையும்போது கேப்டனை மட்டும் கை காட்டுவது சரியல்ல – பாபர் அசாம் வருத்தம்

மீண்டும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினால் அதனை வெளிப்படையாக அறிவிப்பேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

புளோரிடா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.

முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் இதுவரை நிறைய ஐ.சி.சி. தொடர்களில் அணியை வழிநடத்தி இருக்கிறார். ஆனால் ஒரு தொடரில் கூட அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக நடப்பு டி20 உலககோப்பை தொடரில் லீக் சுற்றோடு அந்த அணி வெளியேறியது பலரது மத்தியிலும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அதோடு பாபர் அசாம் கேப்டன்சி-யையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அணியின் தோல்விக்கு கேப்டனை மட்டும் கை காட்டுவது சரியல்ல என்று பாபர் அசாம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததோடு அதனை வெளிப்படையாக அறிவித்திருந்தேன். ஆனால் கேப்டன் பதவி மீண்டும் என்னை தேடி வந்தது. எங்களது கிரிக்கெட் வாரியம் என் மீது நம்பிக்கை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியே அந்த பதவியை மீண்டும் எனக்கு வழங்கியிருந்தனர். அதேபோன்று மீண்டும் நான் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினால் அதனை வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போது வரை நான் கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்து சிந்திக்கவே இல்லை. எப்போதுமே ஒரு அணி தோற்கும் போதும் வெற்றி பெறும் போதும் அணியாகதான் விளையாடுகிறோம். ஆனால் தோல்வி பெறும்போது மட்டும் கேப்டனை கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. அணியில் உள்ள 11 பேரும் ஒன்றாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். எனவே அணி தோற்கும்போது கேப்டன் ஒருவரை மட்டுமே கைகாட்டுவது தவறு" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா