அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், மக்கள்தொகை மற்றும் வருவாய் அடிப்படையில், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் நாளை மறுநாள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாநகராட்சிகளை வருவாய் அடிப்படையிலேயே உருவாக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், இந்த சட்ட திருத்தத்தின் மூலம், மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும், தேவை ஏற்பட்டால் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ளார்.