விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிரணியில் அமைந்துள்ள அதிமுகவுக்கு, திமுகவுடன் நெருக்கமாகப் பயணிக்கும் விசிக அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “விசிக மாநாட்டில் அதிமுக கலந்து கொண்டால் நல்லதுதான். நல்ல விஷயத்திற்காக அதிமுக விசிக ஒன்றிணைவது நல்லதுதான். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துவதில் தவறில்லை.
மது விலக்கு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசும்கூட செய்து கொண்டிருக்கிறது.
2017இல், விசிக மாநாடு நடைபெறும் இதே மைதானத்தில்தான் இந்த கூட்டணி உருவானது. 2014இல் இருந்த மக்கள நலக் கூட்டணியிலிருந்து, 2017-இல் முரசொலி பவள விழாவில் இந்த கூட்டணி உருவானது.
திமுக கூட்டணியில் எவ்வித சிக்கலும் இல்லை, இன்னும் பல தேர்தல்களுக்கு இந்த கூட்டணி தொடரும்” என்றார்.
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும், அந்த மாநாட்டில் பங்கேற்பது அவர்களுடைய விருப்பம் என்றும், இதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.