“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன” – ஆர்.பி.உதயகுமார் 

“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்துவிட்டன” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெ. பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வரும் 9-ம் தேதி நடக்கிறது. சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இப்போராட்டம் நடக்கிறது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அதிமுக அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, உண்ணாவிரதத்ததை முடித்து வைக்கிறார்.

இந்த உண்ணாவிரதத்திற்கான ஏற்பாடுகளை சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்து வருகிறார். டி.குண்ணத்தூர் ஜெயலலிதா கோவிலில் உண்ணாவிரதம் போராட்டத்தல் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியது: “சமானிய முதல்வராக கே.பழனிசாமி இருந்ததால் மக்களுக்கு நெருக்கமாக அவர் இருந்தார். ஆனால், இன்று திமுக ஆட்சி மக்களிடம் இருந்து வெகு தொலைவு விலகி சென்றுவிட்டது. மக்கள் அதிமுக ஆட்சி மீண்டும் வராதா என்று ஏங்குகிறார்கள். அதற்கு அடித்தளமாக மதுரையில் மக்களுடைய பிரச்சினைகளை மையமாக கொண்டு உண்ணாவிதரம் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கமாக அதிமுக மட்டும உள்ளது. மற்ற கட்சிகள், திமுகவிடம் எம்எல்ஏ, எம்பி சீட்களுக்காக அடிபணிந்துவிட்டன. கடந்த சட்டசபைத் தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதியை திமுக அளித்தது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றும், ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களில் நிரப்புவோம் என்று கூறினார்கள். ஆனாலும், எதுவும் நடக்கவில்லை.

இன்றைக்கு நாட்டு மக்களை பற்றி சிந்திக்க முதல்வருக்கு நேரமில்லை. ஏனென்றால் தனது வீட்டு மக்களை நலனை முன்னிறுத்திதான் முதல்வர் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு துரும்பை கூட ஸ்டாலின் கில்லிப் போடவில்லை. இன்றைக்கு இளைஞர்களுக்கு காவல் அரணாக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமியும் மட்டுமே உள்ளார். மூன்று முறை மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, குப்பை வரிஉயர்வு, குடிநீர் வரி உயர்வு இது ஒரு புறம் இருக்க, தற்போது தமிழகத்தில் கடுமையான விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் மருந்து கூட இல்லை” என்று அவர் பேசினார்.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள்

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்