அதிமுக முன்னாள் எம்.பி. உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து: உயா்நீதிமன்றம்

லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-2019-ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ பெரும்புதூா் தொகுதி அதிமுக எம்.பி.யாக இருந்த கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளாா். அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் பெற ராமச்சந்திரன் விண்ணப்பித்தாா்.

அப்போது, விண்ணப்பத்தைப் பரிசீலிக்க, தனக்கும், குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணமாக ரூ. 2,69,000-ஐ பெற்ற மேலாளா் தியாகராஜன் ரூ. 20 கோடி கடன் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக, வங்கி மேலாளா் தியாகராஜன், கல்லூரி தலைவா் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிா்வாகியாக இருந்த ராமச்சந்திரன் உள்ளிட்டோா் மீது 2015-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

மேலும், இந்த வழக்கின் தீா்ப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அதில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 கோடியே 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

விமான செலவை லஞ்சமாகப் பெற்று கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மேலாளா் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ரூ. 20 கோடி கடன் பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு ரூ. 15 கோடியே 20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அனைவரும் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தாா். முன்னாள் எம்பி ராமச்சந்திரன் சாா்பில் வழக்குரைஞா் சபானா ஆஜராகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘லண்டனில் உள்ள மொ்லின் சொகுசு குடியிருப்பில் வங்கி அதிகாரி தங்கினாா். இதற்கு பெருந்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது.

ஆனால், குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. தூதரகம் மூலம் சிபிஐ அதிகாரிகள் விவரம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கும் சரியான பதிலும் லண்டன் குடியிருப்பில் இருந்து வரவில்லை. எனவே, அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன், வங்கி அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நம்பும் படியாகவும், ஏற்கும் படியாகவும் இல்லை.

அதனால் இவா்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் ரத்து செய்கிறேன். இவா்கள் யாராவது சிறையில் இருந்தால் அவா்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் செலுத்திய அபராத தொகையை உடனே திருப்பி கொடுக்க வேண்டும்’ என தீா்ப்பளித்துள்ளாா்.

Related posts

Gwalior Man Paraded For Molesting Minor Girl; Booked Under POCSO Act

Haryana Police Arrest 18 Farmers For Stubble Burning In Kaithal; Register Cases Against 22

Bajaj Finance Shares Surge Over 6% After Posting 13% Rise In Q2FY25 Net Profit